பள்ளியின் முதல் நாள் தொடங்கி கல்லூரி இறுதி நாள் வரை தென்மாவட்டங்களின் மூச்சுக் காற்றை உள்ளிழுத்து சுவாசித்தவன் நான். சொந்த ஊரில் பகட்டாக வாழ்வதும் ஒரு வித போதை தான். எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே பயணங்கள் பக்கத்து ஊர் செல்வதோடு முடிந்துவிடும். மிஞ்சிப்போனால் கல்யாணம், கருமாதி என்று அடுத்த மாவட்டம் வரை தொடரும்.
கல்லூரி நாட்களிலும் அதே நிலைமை தான் , அளவிற்கு அதிகமான பயணங்கள் , ஆனால் அளவான தூரத்தில் ஆர்ப்பரிக்க மட்டுமே.
புத்தக வாசிப்பு நிச்சயம் ஒருவனை தேடலின் பயணத்தை நோக்கி நகர்த்தி செல்லும் என்பதை ஆணித்தனமாக நம்பும் திராவிடன் நான்.
கல்லூரிக்குள் கனவுகளை தொலைத்து அதை தேடி சென்னைக்கு இரயில் ஏறிய கோமாளி பொறியாளர்கள் வரிசையில் கடைசிக்கு முந்தைய ஆளாய் நின்ற கடைநிலை பொறியாளன்.
முதல் முறை சென்னையில் என் சுவாசம், திருவிழா கூட்டத்தில் மாட்டிய திருடன் போல சென்ட்ரல் இரயில் நிலையத்தை வெறிக்க வெறிக்க அதிகாலை 3 மணிக்கு பார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்றும் தென்மாவட்டங்களில் அனேக ஊர்களில் இரவு 9 மணிக்கே விளக்கை அணைத்து, மின்சாரத்தை மிச்சம் செய்யும் பழக்கம் உண்டு.
அதை பார்த்து வளர்ந்த எனக்கு ஏதோ பல மொழிகள் பேசும் வேறொரு கிரகத்திற்குள் நுழைந்த அனுபவத்தை சென்னை முதல் நொடியில் தந்தது.
அதே சிந்தனையில் மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த என்னை, "ஆட்டோ சார் , ஆட்டோ சார்" என்ற கூவலோடு அலேக்காக கொண்டு சென்று ஆட்டோ ஸ்டேன்டின் முன் நிறுத்தும் நடைமுறை இரண்டு வருடமாகியும் இன்று வரை மாறவில்லை.
நான் தங்குமிடம் சரியாக அங்கிருந்து அரைக்கிலோ மீட்டர், அரை விபூதி அடித்த ஆட்டோக்காரர் உதவியோடு அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த இடத்திற்கு ஆறு கிலோமீட்டர் சுற்றி, வெறிச்சோடிய அதிகாலையிலும் இருநூறு ரூபாய் கொடுத்ததெல்லாம் ஏமாற்றத்தின் உச்சக்கட்டம்!!!
காலை ஏழு மணிக்கே சென்னை சுறுசுறுப்போடு பரப்பரப்பானது , பார்க்க பார்க்க வெறியேற்றும் நகரம். சோம்பேறிகளை வெளியேற்றும் நகரம்.
படித்தவன், படிக்காதவன் என்றும் அனைவரின் கால்களும் பறந்த படி எதையோ தேடிக் கொண்டிருந்தது.
நான் முன் நடந்து செல்ல எனக்கு பின்னே என்னை யாரோ பின்தொடர்வது போல் ஓர் உணர்வு முடிவில்லா ஓட்ட பந்தயம் போல.
போட்டிகள் நிறைந்த உலகத்தில், வாழ்க்கையின் முதல் பாடமாய் சுறுசுறுப்பை கண்ணெதிரே காட்டி நிற்காமல் ஓடச் செய்தது சென்னையின் முதல் நாள்!!!
Comments
Post a Comment