Skip to main content

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!



நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள்.

பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர்.

தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ.

உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு.

எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!!

காவி என் நிறமல்ல என்கிறாய்,
கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய்.

திராவிடத்தை ஒதுக்குகிறாய்,
பகுத்தறிவை புகுத்துகிறாய்!!!

ஊரோடு கூடி வாழ்ந்தவர்
சட்டென்று மெளனம் கலைக்க
காரணம் தான் என்னவோ ?

இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும்
இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும்.

எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர்.

உங்கள் நிலைப்பாடு தான் என்ன உலகநாயகனே ?

தனியார் தொலைக்காட்சியில் அரசியல் பேசுகிறீர் , இந்து தீவிரவாதத்தை இந்திய அளவில் விவாத பொருளாக்குகிறீர்.

உம் நற்பணி இயக்க தோழர்களோடு நீவிர் மக்களுக்கு செய்த பணிகளை இம்மக்கள் அறிவர்.

40 ஆண்டு காலம் ஓர் இயக்கத்தை கட்டுக்கோப்போடு வளர்ப்பதென்பது சாதாரண காரியமல்ல , அப்போதே அரசியலை கற்க ஆரம்பித்துவிட்டீர்.

சரியாக வரி கட்டும் கலைஞன் என்ற முறையில் சாமானிய மக்கள் மனதிலும் என்றோ இடம் பிடித்துவிட்டீர்.

ஓட்டிற்கு பணம் வாங்கியே பழக்கப்பட்ட எங்களிடம் , நீங்கள் கட்சி நடத்த நிதி கேட்டது ஆச்சிரியத்தையும் மாற்று அரசியலுக்கான ஓர் பாதையையும் தெளிவாய் எங்கள் கண் முன் காட்டியது.

ஊழலில்லா தேசத்தை உருவாக்குவேன் என்று சொல்லி தோற்றுப்போன அரசியலுக்கு மத்தியில், எங்களுக்கு உங்கள் பேச்சும் மற்றுமொரு நம்பிக்கை தான்.

இருந்தும் ஓர் சாமானியனாய் உங்களிடம் இப்போது இருக்கும் கேள்விகள் ?

நீங்கள் உங்கள் அரசியல் பயணத்தை அதிகாரபூர்வமாக எப்போது துவங்குவீர்கள் ?

ஓட்டு வங்கி அதிகம் உள்ள திராவிட கட்சிகளுடன் தன் பேச்சை மாற்றிக்கொண்டு கமல் இணைவாரா ?

தமிழகம் எதிர்த்திடும் மத்திய கட்சியோடு ஓர் அங்கம் வகிப்பாரா கமல் ?

பட்டுப்போகும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாயகனின் பிரவேசம் துளிர் விடுமா ?

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
திரைத்துறையில் இருந்து அரசியல் களம் கண்ட பலரில் வெகு சிலரே அரியணையில் அமர்ந்துள்ளார்கள்.

நம் சண்டியரும் தனி ஆளாய் , திகட்டா கொள்கை கொண்டு விஸ்வரூபம் எடுத்து வெகு விரைவில் அரியணை ஏற்வாறா ?

#சாமானியனின்_கேள்விகள்

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...