Skip to main content

‪மாலை‬ ‪‎நேர‬ ‪டீகிளாஸ்‬ 6.0

நெடுநாள் காத்திருப்பிற்க்கு பிறகு என் சொந்த ஊருக்கு செல்கிறேன்.
இன்னும் சிறிது நேரத்தில் எனக்கென தேடி பிடிக்கப்பட்ட
unreserved இருக்கையில் ஒரு ரம்மிய பயணம்.
இரயில் புறப்பட தயாராகி மெதுவாக நகர்ந்தது.எதிரே முகமறியா வாலிபரும் , வெத்தலை வாயுடன் வயதான இரண்டு பெரியவர்களும் அவர்களுக்குள்ளாகவே எதையோ பேசிக்கொண்டு சிரிப்பை சில்லரையாய் உதிர்த்து கொண்டிருந்தனர்.
நான் பொதுவாக இரயிலில் ஏறியவுடன் மேல்இருக்கையில் என் உடலை சாய்ப்பது வழக்கம்.இதுவும் என் அப்பா எனக்கு கற்று கொடுத்தது தான்.
சிறு வயதில் எங்கேயாவது இரயில் பயணம் சென்றால் இரயில் நிற்பதுக்கு முன்பாகவே உள்ளே ஏறி , மேல் இருக்கையை பிடித்து "நீ படுத்துக்க தம்பி" என்பார்.
அப்போதெல்லாம் தெரியாது இருக்கைகுள் அடைந்தமரும் இராவிழி வேதனையை. பின்பு நாட்கள் நகர அந்த வேதனையை தனிமையில் உணர்ந்து , அது பழகியும் போய்விட்டது.
எதிரே அமர்ந்திருந்த பெரியவர்கள் இருவரும் மெல்ல பேச துவங்கினர்.அதைக்கூட அறியாமல் கைபேசியை தடவிக்கொண்டிருந்தான் என் அருகில் இருந்த வாலிபன்.
எனக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை , கிடைத்திருந்தால் நானும் அது போல் தான் தடவிக்கொண்டிருந்திருப்பேன்.
நான் என் ரப்பர்பேன்ட் சுற்றிய நோக்கியாவை வெளியில் எடுத்தாலே , பல உருவங்கள் உள்ளுக்குள் ஏளனத்தில் எள்ளி நகையாடும்.
இதையெல்லாம் , யோசனையில் போட்ட படி எதிர் அமர்ந்த பெரியவரை பார்த்தேன்.
"இந்த காலத்துல , மனுஷங்கள்ட்ட யாருய்யா பேசுறாங்க , போன் பேசுறபெட்டிக்குள்ள அடைஞ்சு கிடக்குறாங்க , கேட்டா உலகமே அதுக்குள்ள இருக்குதுன்னு அவங்கள அவங்களே ஏமாத்திகிறாங்க "
"என்னத்த சொல்ல , நம்ம காலத்துல மனுஷங்கள சாம்பாதிச்சோம் , இப்ப அப்படியா ஊரே பணம் பணம் ஓடுறாங்கய்யா " என்றார் அவர் அருகில் இருந்த மற்றொரு பெரியவர்.
"இப்ப கூட பாரு , காடு கரையெல்லாம் வித்து என் புள்ளைய படிக்க வச்சேன் , கை நிறைய சம்பாதிக்கிறான் , கேட்டதெல்லாம் வாங்கி தர்றான் , ஆனா அவன் ஒரு ஊர்லையும் , நான் என் சொந்த ஊர்லையும் அல்லாடிட்டு கிடக்குறோம் "
"ஏம்யா , போய் உம்முட்டு புள்ள கூடவே இருக்க வேண்டியது தான ?
" எங்க , புறந்த ஊர விட்டு போக என் மனசு கேக்கல , அது தான் தோன்றப்ப வந்து பேரப்புள்ளைகள பாத்துட்டு போயிக்கிறேன் , உங்க புள்ள என்ன பண்ணுது ? "
" அத ஏன் கேங்குறீங்க , இரண்டு ஆம்பிள புள்ளைய பெத்து ஏதோ முடிஞ்ச அளவுக்கு படிக்க வச்சேன் , ஒருத்தரு பொள்ளாச்சி பக்கம் மளிகை கடை வச்சிருக்காரு , இன்னொருத்தரு இங்க சென்னையில ஏதோ பெரிய கம்பெனில வேலை செய்றாப்டி , மாசம் ஒரு ஊருக்கு போய் வயித்த கழுவிட்டு இருக்கேன்"
எதிரே அமர்ந்திருந்து இவற்றை கேட்டு கொண்டிருந்த எனக்கு மனம் ரணமாய் மாறிவிட்டது.
பணம் தேவையென்ற அளவிற்க்கு கொடுத்தும் அநாதையாய் வாழும் ஒரு பெரியவர் , உயிர் வாழும் உணவை தேடி மாதாமாதம் அகதியிருப்பை மாற்றும் மற்றொரு பெரியவர்.
என் அப்பாவோ , அம்மாவோ இது மாதிரியான நிலைமையை எள்ளலவும் எண்ணகூடாது என்பது மட்டுமே என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
தற்பெருமைக்கென தம்மை எழுதிக்கொடுக்கும் இக்காலத்தை ஒப்பிடும் போது , வெளிப்படையாக குழந்தைபோல் குதப்பிகொண்டு பேசும் அப்பெரியவர்கள் வாழும் தெய்வங்கள் தான்.
நேரம் 11 மணியை நெருங்கி கொண்டிருக்கையில் தீடிரென ஒரு அழைப்பு , ஆம் வித்யாவிடமிருந்து தான்.
"ஹாலோ "
" என்ன கார்த்திக் சார் , Train ஏறுனதும் கால் பண்றேன்னு சொன்னிங்க "
"bal இல்லைங்க , அது தான் கூப்புடுல "
" மறுபடியும் அதே கதையா , சரி பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க "
" சரிங்க , ரொம்ப Thanks "
"எதுக்கு ? "
" இல்ல , நேத்து அம்மாக்கு saree select பண்ணி கொடுத்ததுக்கு "
" ஓ , அதுக்கா , சரி சரி "
" சரிங்க , விட்டு விட்டு கேக்குது , நான் காலைல கூப்புடுறேன் "
" நீங்க , காலைல , அப்படியே கூப்டுட்டாலும் , சரி பத்திரமா போய்ட்டு வாங்க கார்த்திக் " என்றார் சிரித்தபடி
"சரிங்க , good night " என்று சொல்லி கைபேசியை அமர்த்தினேன்.
ஐந்து நிமிட அலைபேசி பேச்சுக்குள் , அப்பெரியவர்கள் குடும்பம் கடந்து அரசியல் பார்வைக்குள் அடியெடித்து வைத்தனர்.
அவர்களின் பேச்சுக்கு அடிமையாகி போன என் மனது காட்பாடி இரயில் நிறுத்தத்தில் விழித்தது.என் அருகே அமர்ந்திருந்தவரும் அந்நிறுத்தத்தில் இறங்கவே , ஜன்னலோர இருக்கை என் வசமானது.
"சார் , டீ காபி , டீ காபி என்று கூவிக்கொண்டே அங்குமிங்கும் ஒரு சிறுவன் நடந்து கொண்டிருந்தான்.
" தம்பீ , இங்க ஒரு டீ ப்பா " என்று வாங்கி கொண்டு அந்த பெரியவர்கள் சொன்னதையே நினைத்து கொண்டிருந்தேன்.
இந்த இரயில் ஏறும் வரை , ஏன் அந்த பெரியவரின் பேச்சை கேட்கும் வரை , பணம் தான் உலகமென்று என் மனம் உளறிக்கொண்டிருந்தது.
அதன் வெளிப்பாடு தான் என் அம்மாவிற்கும் , அப்பாவிற்கும் நான் வாங்கிய ஆடை.
நானும் பாசத்தை பணம் என்ற பொருளுக்குள் தான் அடைத்து வைத்து கொண்டிருக்கிறேனோ என்றும் கூட எண்ணிக்கொண்டிருந்தேன்.
எது எப்படியோ , மூன்று மாத இடைவெளிக்கு பிறகு என் அம்மா , அப்பா வை காண போகிறேன் என்ற சந்தோஷத்தில் சிலாகித்தவனாய் , ஜன்னல் கம்பிகளை பற்றிக்கொண்டு , அப்பெரியவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இரயிலோடு நகர்கிறேன்.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

மாலை நேர டீகிளாஸ் 2.0

இரவு 9 மணி தந்தையின் போனிற்காக காத்துகொன்டிருந்தேன். தினமும் இதே டைம் இக்கு தான் அவர் அழைப்பார். கல்லூரிக்கு பிறகு என் அலைபேசியில் 1 ரூபாய் இருந்தாலே அது அதிசியம் தான்.உண்ணவே உணவு இல்லை பிறகு எங்கு ரீ சார்ஜ் செய்வது . இன்னும் என் அலைபேசி அலறவில்லை , காத்திருப்பில் அயர்ந்தவனாய் இரவு நேர உணவை குடிக்க டீ கடை நோக்கிய ஒரு பயணம். எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று என் தந்தையிடம் சொல்ல துடித்து கொண்டிருந்தேன். அவர் ஒரு கடின உழைப்பாளி , 10 வயதிலே குடும்பத்தை சுமக்க துணிந்தவர்.அவர் மகன் நான் 23 வயதிலும் அவர் மேல் ஏறி தான் சவாரி செய்து கொண்டிருகிறேன். இறக்கி விட்டால் இறந்துவிடுவேனோ என்ற பயத்தில் தான் 56 வயதிலும் சுமந்து கொண்டிருக்கிறார். யார் யாரோ சொல்லி தான் என்னை இன்ஜினியரிங் சேர்த்தி விட்டார். Pocket Money என்ற கல்லூரி கலாச்சாரத்தை நான் கேட்காமலேயே அனுப்பி வைப்பார். அப்போதெல்லாம் அறியவில்லை அவரின் சுமை arrear வைத்து arrear வைத்தே அழுக்காய் போன ஜன்மம் நான். இப்போது புலம்பி என்ன செய்வது காலம் கடந்த பிறகு தான் அதன் அருமையே நமக்கு புரிகிறது. ஆனால் , எப...