Skip to main content

‪மாலை‬ ‪‎நேர‬ ‪‎டீகிளாஸ்‬ 7.0



விடியற்காலை 6 மணிக்கு சூரியன் லேசாக அதன் கண்களை திறந்து கொண்டிருந்தது.என் கண்கள் இரவு முழுவதும் உறங்காமலே கிறங்கி போய் கிடந்தது.
ரயிலின் வேகம் குறைய குறைய என் ஆர்வம் அதிகரித்து கொண்டே இருந்தது.இன்னும் 10 நிமிடத்தில் என் ஊரை நெருங்கிவிடுவேன்.
என் அம்மா , அப்பாவை காண போகும் சந்தோஷத்தில் கிறங்கிப்போன என் கண்களும் கிளர்ச்சியுற்று எழுந்தது.
இரயில் ஒருவழியாக நிறுத்தத்தை அடைந்தது.கையில் என் பையை எடுத்துகொண்டு மெதுவாக கீழிறங்கினேன்.
அங்கிருந்து சரியாக அரைமணி நேர நடைப்பயணம் தான் என் வீட்டை அடைய , நடக்க துவங்கின என் கால்கள் என் வீட்டை எதிர்நோக்கி.
மூன்று மாதத்தில் எதுவும் மாறவில்லை , அதே கூரை வீடுகள் , ஆங்காங்கே குப்பைகூளங்கள் , ஆடைகிழிந்த அரசுப்பள்ளி என்று இன்றும் மாற்றத்தை தேடிக்கொண்டிருக்கும் குக்கிராமம் தான் என் ஊர்.
பசுமைக்கு குறைவில்லா ஊரென்று ஒரு காலத்தில் இருந்ததாம் என் அப்பா அடிக்கடி சொல்லுவார்.இன்று அனைத்தும் பட்டாப்போடப்பட்ட வெற்று பத்திரமாய் பேங்க்லாக்கருக்குள் குடியேறிவிட்டது.
இதெயெல்லாம் நினைத்து கொண்டே என் வீட்டை அடைந்துவிட்டேன்.
முன்னால் என் எதிரி முருங்கை மரம் பின்னால் கொஞ்சம் காலி இடம் நடுவே கருஓலை குடிசையில் தான் என் வீடு.என் அப்பா உழைத்த உழைப்பிற்கு சேமித்த மிச்சம் இந்த இடம் மட்டும் தான்.
ஏதோ ஒன்று வீட்டின் வாயிலில் மறைந்திருந்தது. ஆம் என் அப்பாவின் மிதிவண்டி தான் , இருபது ஆண்டுகள் அவருடனே பயணம் செய்த மிதிவண்டி அது , ஆங்காங்கே சில ஒடுக்கங்களுடன் இன்றும் என் அப்பாவின் ஆஸ்தான வாகனமது.
சரி , இந்த காலை பொழுதிலே இவர் எங்கு சென்றிருப்பார் என்ற சிந்தனையிலேயே முன் நகர்ந்தேன்.
"சாமி " என்றொரு குரல் அம்மா தான்.
"அம்மா.... , எப்படி இருக்க அம்மா ? "
"நான் நல்லா இருக்கேன் சாமி , இப்ப தான் நினச்சேன் , எங்க புள்ளைய இன்னும் காணோம்ன்னு "
"இப்ப தாம்மா வந்தேன் "
" ஏன் , சாமி இப்படி இளச்சு கிடக்குற , நேரா நேரம் சாப்டுயா " என்றார் கண்கலங்க
"அம்மா , இப்ப ஏன்மா அழுகுற , அதெல்லாம் ஒன்னுமில்ல மா , நான் நல்லா தான் சாப்டுறேன் "
"அய்யோ , நான் ஒரு கிறுக்கச்சி ஊர்ல இருந்து வந்த புள்ளைய வாசல் லையே நிப்பாட்டி பேசிட்டு இருக்கேன் பாரு , உள்ள வா சாமி "
"ஹம்... சரிம்மா "
அதே குழந்தை பேச்சுடன் , அழுக்குபடிந்த சேலையில் அவளின் உலகறியா அன்பிற்கு இன்னொரு ஜென்மமேனும் இதே ஓலை குடிசையில் அவள் வயிற்றில் பிறக்க வேண்டும்.
"சாமி , கை கால் கழுவீட்டு வாய்யா , காபி வைக்குறேன்"
"சரிம்மா " என்றேன் சிரித்தபடி
பட்டிணத்தில் கடந்த இந்த மூன்று மாதத்தில் மறந்து போன என் கிராமத்து சுவடுகளில் இந்த கை , கால் கழுவும் பழக்கமும் ஒன்று.
முன்பெல்லாம் வெளியில் சென்று வந்தாலே கை , கால்களை சுத்தமாக கழுவிவிட்டு தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும். அப்படி கழுவாமல் உள்ளே வந்தால் முருங்கை மரத்தின் குச்சிகளில் சரமாரியாக அடிவிழும்.
அப்போதும் அழுதுகொண்டே அந்த முருங்கை மரத்தை திட்டுவேனே தவிர என் அம்மாவை திட்டியது இல்லை. இப்படி பலமுறை அடிவாங்கி அடிவாங்கி அந்த முருங்கை மரம் என் எதிரியானது தான் மிச்சம்.
கழுவிய கை , கால்களோடு உள்ளே சென்று அப்பாவின் கயிற்று கட்டிலில் அமர்ந்தேன்.
" இந்தா சாமி , சூடா இருந்தா கொடுய்யா , ஆத்தி தாரேன் "
" இல்ல மா , அளவு சூடு தான் , என்னம்மா பால் காபி போட்டுருக்க ? "
எங்கள் வீட்டில் வரக்காபி தான் அன்றாட வழக்கம் , யாராவது விருந்தினர் வந்தால் தான் பால் காபி , பட்டிணத்து சென்று கிடைக்க மறுத்த கிராமத்து சுவடுகளுள் இதுவும் ஒன்று.
" இல்ல சாமி , நீ வரேன்னு சொன்னியா , அது தான் நம்ம பால்கார கனகராஜ்ட்ட கால் லிட்டர் வாங்குனேன் "
"எதுக்கு மா , இதெல்லாம் , சரி அப்பா எங்க , சைக்கிளையும் காணோம் "
" நீ , வரேன்னு சொன்னதுல இருந்து மனுஷன் தலகால் புரியாம அங்கிட்டும் இங்கிட்டும் ஒடிட்டு கிடந்துச்சு , காலை லையே போன தான் நல்ல கறியா கிடைக்கும்ன்னு பாய்க்கடை க்கு போயிருக்கு "
"ஏன்மா , அவர அலைய வைக்குற "
"அதெல்லாம் , ஒன்னுமில்ல சாமி , செத்தநேரம் படு , நான் போய் நல்லெண்ண வாங்கிட்டு வாரேன் "
"அதெல்லாம் எதுக்குமா ? "
" சும்மா இரு சாமி , உடம்பு உருக்குழைஞ்சு கிடக்கு , கண்டவன் கண்ணெல்லாம் வேற பட்டிருக்கும் , நல்லா எண்ணெய் தேச்சு குளிச்சைன்னா எல்லா கிரகமும் ஓடிப் போய்டும்"
"ஹம்ம்....சரிம்மா" என்றபடி கட்டிலில் தலையசைத்தேன்.
பட்டம் முடித்து பட்டினம் சென்று பணம் என்னும் காகிதம் பெற பாசத்தையள்ளவா அடமானம் வைத்திருக்கிறேன்.
கடந்து போன மூன்று மாதங்களில் என் அம்மாவின் அன்பெனும் பாசத்தை எவ்வளவு தவறவிட்டிருப்பேன்.
அதையெல்லாம் நான் சம்பாரிக்கும் இந்த பணத்தால் விலைக்கு வாங்கி விட முடியுமா ? ஆழ்ந்த யோசனையில் டீ கிளாஸை அருகில் வைத்துவிட்டு , அழுப்பான என் கண்களும் அப்படியே அயர்ந்தது.

#தொடரும் 

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

மாலை நேர டீகிளாஸ் 2.0

இரவு 9 மணி தந்தையின் போனிற்காக காத்துகொன்டிருந்தேன். தினமும் இதே டைம் இக்கு தான் அவர் அழைப்பார். கல்லூரிக்கு பிறகு என் அலைபேசியில் 1 ரூபாய் இருந்தாலே அது அதிசியம் தான்.உண்ணவே உணவு இல்லை பிறகு எங்கு ரீ சார்ஜ் செய்வது . இன்னும் என் அலைபேசி அலறவில்லை , காத்திருப்பில் அயர்ந்தவனாய் இரவு நேர உணவை குடிக்க டீ கடை நோக்கிய ஒரு பயணம். எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று என் தந்தையிடம் சொல்ல துடித்து கொண்டிருந்தேன். அவர் ஒரு கடின உழைப்பாளி , 10 வயதிலே குடும்பத்தை சுமக்க துணிந்தவர்.அவர் மகன் நான் 23 வயதிலும் அவர் மேல் ஏறி தான் சவாரி செய்து கொண்டிருகிறேன். இறக்கி விட்டால் இறந்துவிடுவேனோ என்ற பயத்தில் தான் 56 வயதிலும் சுமந்து கொண்டிருக்கிறார். யார் யாரோ சொல்லி தான் என்னை இன்ஜினியரிங் சேர்த்தி விட்டார். Pocket Money என்ற கல்லூரி கலாச்சாரத்தை நான் கேட்காமலேயே அனுப்பி வைப்பார். அப்போதெல்லாம் அறியவில்லை அவரின் சுமை arrear வைத்து arrear வைத்தே அழுக்காய் போன ஜன்மம் நான். இப்போது புலம்பி என்ன செய்வது காலம் கடந்த பிறகு தான் அதன் அருமையே நமக்கு புரிகிறது. ஆனால் , எப...