Skip to main content

பயணக் காதல் - 02


நேரம் சரியாக ஏழு மணி, இருள் சூழா பெளர்ணமி அது , சரி "வா போகலாம்" என்ற தொனியில், என் இருசக்கர வாகனத்திடம் தனியே பேசியபடி என்‌ வீட்டை நோக்கி கிளம்பினேன்.
வாகனங்கள் எல்லாம் வரிசைக்கட்டிய படி நெரிசலில் தவழ்ந்து கொண்டிருந்தது.
"நாம் இருவர் நமக்கு இருவர்" என்ற நம் அரசின் கோட்பாடு காலாவதியாகி கால் நூற்றாண்டு ஆன உணர்வு.
வடித்தெடுத்த முட்டாள்கள் ஆங்காங்கே ஹாரன் அடிக்க, பிச்சைக்காரர்கள் "சார்" என்று ஆங்கிலத்தில் பிச்சை கேட்க, தூரத்தில் கரைவேட்டி, கட்சி கூட்டம் நடத்த, நம் நாடு வல்லரசு ஆனது போல் ஓர் நிழல் தோற்றம் என் கண் முன்னே.
நேரம் ஆக ஆக நெரிசல் நீண்டு கொண்டே போனது. என் விழிகள் அங்குமிங்கும் அலைப்பாய்ந்த படி , அவளின் முகம் பார்த்த நொடி இமைக்காமல் நின்றது.
மஞ்சள் நிற ஸ்கூட்டி அவளை ஆரத்தழுவி அணைத்து கொண்டிருந்தது. பெளர்ணமி நிலவில் நான் கண்ட அவளின் முகம், தேடினாலும் கிடைக்காத வரம்.
ஐபோனை கையில் எடுத்து எதையே பார்த்து கொண்டிருந்தாள். அவள் நெற்றிக்கு நடுவே, அவளை ஒட்டிக் கொண்டிருக்கும் ஸ்டிக்கர் பொட்டு.
கிறுக்காத ஓவியம், கிறங்கடிக்கும் சிற்பமாய் என் அருகே , ஓர் நாள் முழுவதும் நெரிசல் நீளாதா என்ற ஆவலில் மீண்டும் அவளை பார்க்க, ஹாரனை இடைவிடாது அழுத்திக் கொண்டிருந்தாள். அழகிகள் ஹாரன் அடித்தாலோ , நம் மேலே வண்டியில் இடித்தாலோ அமைதி காக்க வேண்டும் என்பது ஆண்கள் டைரியில் எழுத படாத விதி.
நெரிசல் சற்று விலக, கண்ணெதிரே இருந்தவள் கண் சிமிட்டும் நேரத்தில் கால் கிலோ மீட்டர் போய்விட்டாள்.
சரி நாமும் "வா போகலாம்" என்ற தொனியில் என் இருசக்கர வாகனத்தை மெதுவாய் விரட்ட , என் முன்னே முந்தி கொண்டு மற்றுமொரு ஸ்கூட்டி நீல நிறத்தில் பறந்து சென்றது , அதை பின் தொடர்ந்த படி என் வீட்டை நோக்கிய என் நெரிசல் பயணம்.
பி.கு : பெண்களை ரசிக்க பழகுங்கள் இரைச்சல் நிறைந்த நெரிசல் கூட அழகாகும் 

Comments

Popular posts from this blog

இன்று டீக்கடையில் டீ அருந்த சென்ற போது இந்த வருடம் +2 முடித்த நான்கைந்து நல்ல உள்ளங்கள் காரசாரமாய் விவாதித்து கொண்டிருந்தனர் . சாதாரண விவாதம் என்றாலே நமது காது , பேசுபவர் வாய் வரை சென்று வரும் .காரசார விவாதம் என்பதால் என் காது, கொஞ்சம் முன்னேறி அவர்கள் உதடையே நோக்கிக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் மச்சி இன்ஜினியரிங் படிப்போம் டா அப்பதான் Bpo , govt , foreign ன்னு எந்த வேலைக்காவது உடனே போயிரலாம் . அப்படியே வேலைக்கு போகலைனாலும் வீட்ல ஒன்னும் கேட்க மாட்டாங்க ஏன்னா வேலை தேடிட்டு இருக்குற முக்காவாசி பயலுக இன்ஜினியரிங் படிச்சவங்க தான் என்று அவன் சொல்லும் போதே, நானும் இன்ஜினியரிங் தான் டா படுச்சிருக்கேன் என்று உள்ளூர நினைத்து கொண்டு மெல்ல நடையை கட்டினேன்.. இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவா இருக்காங்கப்பா...

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...