Skip to main content

‪பதில்‬ ‪இல்லா‬ ‪‎வினா‬ ?

நன்றாக நினைவிருக்கிறது , அவன் பெயர் சபீர் என்னுடைய அரைட்ரவுசர் தோழன். ஓரே பள்ளியில் தான் ஒன்றாக படித்தோம். சாதியும் , மதமும் அறியாத பருவமது.

விடுமுறை நாட்களில் நிற்காமல் கிளம்பிவிடும் எங்களின் மிதிவண்டி சக்கரம்.

ஊர்காவல் அய்யனார் தொடங்கி , மாதா கோவில் , மதுரைவீரன் சிலை , மரிகொழுந்து சோடா , மசூதி தொழுகை , பால் போன்ற ஐஸ்கீரிம் , பண்ருட்டி முருக்கு , பட்டாம்பூச்சி இறக்கை , பொக்கவாய் கிழவி என்று சூரியன் எங்களை இருளில் மூழ்கும் வரை நிற்காமல் சுற்றும் எங்கள் மிதிவண்டி வீல்கள்.

அப்போது நிச்சயம் நாங்கள் அறிந்திருக்கவில்லை சாதியை பற்றியும் , மதத்தை பற்றியும்.

அந்த வயதில் நாங்கள் சொல்லும்
"சாமி சத்தியமா டா" என்ற ஒற்றை வார்த்தையே அதற்கு சாட்சி.

நான் "அம்மன் சத்தியம் என்றோ , முருகன் சத்தியம் என்றோ " கூறியது கிடையாது.

சபீரும் " அல்லா சத்தியம் " என்று சொன்னது கிடையாது.

உடனிருந்த இன்னொரு நண்பன் ஆல்பட்டும் " இயேசு சத்தியம் " என்று கூறிய நியாபகம் இல்லை.

அந்த வயதில் "சாமி" என்ற ஒற்றை வார்த்தையில் முற்று பெருகிறது எங்களின் சாதியும் , மதமும்.

பிறகு எந்த வயதில் நம் மனதுக்குள் நுழைகிறது இந்த சாதியும் , மதமும் என்ற கேள்விக்கு

இளமை காலங்களை கொஞ்சம் கிளரினாலே அதற்கான உண்மை வெளிப்படும்.

சபீருடன் நான் சுற்றிய போது "துலுக்க பையலோட என்னடா சகவாசம்" என்று அடிக்கடி ஓயாது ஒலித்து கொண்டிருந்த பாட்டியின் குரல்தான் ஒருவேளை நம் மனதை மாற்றியிருக்குமோ ...

இல்லை , "எட்டாவது வார்டு பையன்கூட என்னடா பேச்சு" என்று தினம் தினம் கழுவி ஊற்றும் அன்னையின் அதட்டலால் வந்திருக்குமோ ..

ஒருவேளை , சாதிய மநாட்டிற்கு இழுத்து சென்ற தந்தையின் அக்கரையால் வந்திருக்குமோ..

விடையில்லா கேள்விகள் தான் அவை.

நிச்சயம் , சபீர் வீட்டிலும் இதே மாதிரி விடையில்லா கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.

என் பாட்டியோ , அம்மாவோ , தந்தையோ இல்லை சாதி,மதம் என்று வீணாக பிதற்றி கொண்டிருக்கும் வேலையில்லா மூடர்களோ அனைவரின் பேச்சும் அன்று என் பிஞ்சு மனதிற்கு நஞ்சாகதான் இறங்கியது.

நாட்கள் நகர பெரியார் மற்றும் அம்பேத்கர் புத்தகங்கள் தான் மருந்தாக என்னுள் இருந்த நஞ்சை முறித்தது.

அந்த மருந்து கிடைக்க பெறாத பல உயிர்கள் விஷம் தலைக்கேறி இன்றும் நாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே நகர்ந்து போகின்றனர்.

அது ஒருபுறம் இருக்கட்டும் , இப்போது நான் ஏன் இவ்வாறு பிதற்றி கொண்டிருக்கிறேன்.

ஆமிர்கான் என்பவர் எந்த மதமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் , அவர் கூறிய கருத்தில் உடன்பட்டு போவதும் , உடன்படாமல் ஒதுங்கி நிற்பதும் தனிக்கதை.

அந்த கருத்திற்க்கு தேவையின்றி உயிர் கொடுத்து , அதற்கு மேலும் மேலும் உணவளித்து வரும் சமூக ஊடகங்களுக்கும் , சார்பற்ற அரசியல்வாதிகளுக்கும் ஒன்றை மட்டும் தான் நினைவு படுத்த விழைகிறேன்.

என் நாடு மதசார்பற்ற நாடு , கருத்து சுதந்திரம் உள்ள நாடு என்று பாடப்புத்தகத்திலேயே படித்து வளர்ந்தது என் தலைமுறை.

அதை என் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க முடியுமா ? என்றால் பதில் இல்லா வினாவாக தான் இன்றளவில் தொடர்கிறது.

Comments

Popular posts from this blog

நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!!

நடிகனாய் இவ்வூர் போற்றும் நாயகனுக்கு சாமானியனாய் சில கேள்விகள்!!! இன்றைய இளைய தலைமுறையும் சரி , அதற்கு முந்தைய என் தகப்பன் தலைமுறையும் சரி , அனைவரும் உங்கள் படங்களை பார்த்தே வளர்ந்தவர்கள். பல பேசும் படங்களில் நீவிர் நடித்த போதே பேசாமல் சில அரசியலை பேசிவிட்டீர். தெளிவான தமிழை புதிர்போட்டு எழுதுவதில் உம்மை மிஞ்சிட ஆளுண்டோ. உம் கனக்கின்ற குரலுக்கு தான் எத்துனை எதிர்ப்பார்ப்பு. எதிர்ப்பார்த்த வேளையில் மெளனம் காத்து , எதிர் பார்க்கா நேரத்தில் எகிறி அடிக்கிறாயே!! காவி என் நிறமல்ல என்கிறாய், கூடவே கருப்புக்குள் காவியுண்டு என்கிறாய். திராவிடத்தை ஒதுக்குகிறாய், பகுத்தறிவை புகுத்துகிறாய்!!! ஊரோடு கூடி வாழ்ந்தவர் சட்டென்று மெளனம் கலைக்க காரணம் தான் என்னவோ ? இலைகள் கயவரின் பிடியில் கருக, சூரியனும் வெளிச்சமின்றி தவிக்கும் இவ்வேளையிலா நீவிர் மெளனம் கலைக்க வேண்டும். எல்லாம் போகட்டும் , மாற்று அரசியலை எதிர்பார்த்து ஓர் கூட்டமே காத்திருக்க , கடந்த ஆண்டு தாமரையை ஓர் விதமாய் ஆதரித்தீர் , இன்று அதற்காக வருந்தவும் செய்கிறீர். உங்கள் நிலைப்பாடு தான் என்ன உ...

அபார்ட்மெண்டில் ஓர் நாள்

இளவெயில் நேரத்தில் இளைப்பாற இடம் தேடி புறாக்கூட்டம் அலைந்து கொண்டிருக்க , மிதிவண்டியில் சிறார்கள் அங்குமிங்கும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வட்டத்திற்குள் மிதந்து கொண்டிருந்தனர். பணத்தகுதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஆரம்ப நிலையை கண்ணெதிரே கண்டு கொண்டு மெதுவாய் நகர்ந்தேன். அபார்ட்மெண்ட் - அமைதியின் இருப்பிடம் என்றெல்லாம் பொய்யை அவிழ்த்து விடாமல் விஷயத்திற்கு வருகிறேன். கிராமத்தில் பிறந்து நகரத்தில் பணிபுரியும் நல் உள்ளம் கொண்டோரின் நரகம் இந்த அபார்ட்மெண்ட் கலாச்சாரம். கூட்டு குடும்பமாய் கூடி திரிந்த வாழ்க்கையும் காணாமல் போனோர் பட்டியலில் முதல் இடத்தில் தேடும் பொருளாய் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கார சிட்டியில் ஆறடுக்கு , ஏழடுக்கு கட்டிடங்கள் ஆங்காங்கே வரிசை கட்ட , அயல்நாட்டிற்கு பணிபுரியும் ஆடுகளும் தேடி தேடி தன் தலையை பலி கொடுக்க தயாரானது. பலி கொடுத்த பல ஆடுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பணமுதலைகளின் கடன்காரர்கள் என்பதை நன்கு அறிந்து தான் தன்னை தாரவார்த்துக் கொண்டது. பளிங்கு கற்கள் , பாலிஷ் போட்ட கதவு , பால்கனி அழகு என்று, பார்த்தவுடன் வசீகரிக்கும் பால்நிலா பெண...

மாலை நேர டீகிளாஸ் 2.0

இரவு 9 மணி தந்தையின் போனிற்காக காத்துகொன்டிருந்தேன். தினமும் இதே டைம் இக்கு தான் அவர் அழைப்பார். கல்லூரிக்கு பிறகு என் அலைபேசியில் 1 ரூபாய் இருந்தாலே அது அதிசியம் தான்.உண்ணவே உணவு இல்லை பிறகு எங்கு ரீ சார்ஜ் செய்வது . இன்னும் என் அலைபேசி அலறவில்லை , காத்திருப்பில் அயர்ந்தவனாய் இரவு நேர உணவை குடிக்க டீ கடை நோக்கிய ஒரு பயணம். எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று என் தந்தையிடம் சொல்ல துடித்து கொண்டிருந்தேன். அவர் ஒரு கடின உழைப்பாளி , 10 வயதிலே குடும்பத்தை சுமக்க துணிந்தவர்.அவர் மகன் நான் 23 வயதிலும் அவர் மேல் ஏறி தான் சவாரி செய்து கொண்டிருகிறேன். இறக்கி விட்டால் இறந்துவிடுவேனோ என்ற பயத்தில் தான் 56 வயதிலும் சுமந்து கொண்டிருக்கிறார். யார் யாரோ சொல்லி தான் என்னை இன்ஜினியரிங் சேர்த்தி விட்டார். Pocket Money என்ற கல்லூரி கலாச்சாரத்தை நான் கேட்காமலேயே அனுப்பி வைப்பார். அப்போதெல்லாம் அறியவில்லை அவரின் சுமை arrear வைத்து arrear வைத்தே அழுக்காய் போன ஜன்மம் நான். இப்போது புலம்பி என்ன செய்வது காலம் கடந்த பிறகு தான் அதன் அருமையே நமக்கு புரிகிறது. ஆனால் , எப...